திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.74 திருத்தேவூர் - திருவிராகம்
பண் - சாதாரி
காடுபயில் வீடுமுடை யோடுகலன்
    மூடுமடை யாடைபுலிதோல்
தேடுபலி யூணதுடை வேடமிகு
    வேதியர் திருந்துபதிதான்
நாடகம தாடமஞ்ஞை பாடவரி
    கோடல்கைம்ம றிப்பநலமார்
சேடுமிகு பேடையனம் ஊடிமகிழ்
    மாடமிடை தேவூரதுவே.
1
கோளரவு கொன்றைநகு வெண்டலையெ
    ருக்குவன்னி கொக்கிறகொடும்
வாளரவு தண்சலம கட்குலவு
    செஞ்சடைவ ரத்திறைவனூர்
வேளரவு கொங்கையிள மங்கையர்கள்
    குங்குமம்வி ரக்குமணமார்
தேளரவு தென்றல்தெரு வெங்கும்நிறை
    வொன்றிவரு தேவூரதுவே.
2
பண்தடவு சொல்லின்மலை வல்லியுமை
    பங்கன்எமை யாளும்இறைவன்
எண்தடவு வானவரி றைஞ்சுகழ
    லோன்இனிதி ருந்தஇடமாம்
விண்தடவு வார்பொழிலு குத்தநற
    வாடிமலர் சூடிவிரையார்
(*)செண்தடவு மாளிகைசெ றிந்துதிரு
    வொன்றிவளர் தேவூரதுவே.

(*) சேண் என்பது செண் எனக் குறுகி நின்றது.
3
மாசில்மனம் நேசர்தம தாசைவளர்
    சூலதரன் மேலையிமையோர்
ஈசன்மறை யோதியெரி ஆடிமிகு
    பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமும்
    மாதரவர் பூவைமொழியுந்
தேசவொலி வீணையொடு கீதமது
    வீதிநிறை தேவூரதுவே.
4
கானமுறு மான்மறியன் ஆனையுரி
    போர்வைகன லாடல்புரிவோன்
ஏனஎயி றாமையிள நாகம்வளர்
    மார்பினிமை யோர்தலைவனூர்
வானணவு சூதமிள வாழைமகிழ்
    மாதவிப லாநிலவிவார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள்
    பாடிவரு தேவூரதுவே.
5
ஆறினொடு கீறுமதி யேறுசடை
    யேறன்அடை யார்நகர்கள்தான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த
    நீறன்நமை யாளும்அரனூர்
வீறுமலர் ஊறுமது ஏறிவளர்
    வாயவிளை கின்றகழனிச்
சேறுபடு செங்கயல்வி ளிப்பஇள
    வாளைவரு தேவூரதுவே.
6
கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுரம்
    அன்றவிய நின்றுநகைசெய்
என்றனது சென்றுநிலை யெந்தைதன
    தந்தையமர் இன்பநகர்தான்
முன்றின்மிசை நின்றபல வின்கனிகள்
    தின்றுகற வைக்குரளைகள்
சென்றிசைய நின்றுதுளி ஒன்றவிளை
    யாடிவளர் தேவூரதுவே.
7
ஓதமலி கின்றதென் இலங்கையரை
    யன்மலிபு யங்கள்நெரியப்
பாதமலி கின்றவிர லொன்றினில
    டர்த்தபர மன்றனதிடம்
போதமலி கின்றமட வார்கள்நட
    மாடலொடு பொங்குமுரவஞ்
சேதமலி கின்றகரம் வென்றிதொழி
    லாளர்புரி தேவூரதுவே.
8
வண்ணமுகி லன்னஎழில் அண்ணலொடு
    சுண்ணமலி வண்ணமலர்மேல்
நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள்
    கண்ணவன் நலங்கொள்பதிதான்
வண்ணவன நுண்ணிடையின் எண்ணரிய
    அன்னநடை யின்மொழியினார்
திண்ணவண மாளிகைசெ றிந்தஇசை
    யாழ்மருவு தேவூரதுவே.
9
பொச்சமமர் பிச்சைபயில் அச்சமணு
    மெச்சமறு போதியருமா
மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு
    நச்சரவன் மொச்சநகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில் ... ... ... ... ...(*)

(*) இச்செய்யுளின் மற்றைய அடிகள் சிதைந்து போயின.
10
துங்கமிகு பொங்கரவு தங்குசடை
    நங்களிறை துன்றுகுழலார்
செங்கயல்கள் மங்கையுமை நங்கையொரு
    பங்கனமர் தேவூரதன்மேல்
பைங்கமல மங்கணிகொள் திண்புகலி
    ஞானசம் பந்தனுரைசெய்
சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை
    வல்லவர்கள் சங்கையிலரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com